10/13/2010

காமினியிலும் எந்திரன் (சவால் சிறுகதை)






காமினியிலும் எந்திரன் (சவால் சிறுகதை)


       மருந்து நெடியும் டெட்டால் வாசனையும் மூக்கின் வழியாக மூளைக்கு அது மருத்துவமனைதான் என்று குறுஞ்செய்தி அனுப்பின . மஞ்சள்பூ போட்ட பச்சைப்பாவாடையில் இருந்த சிறுகுழந்தை அம்மாவிடம் ஊசி வேண்டாம் என்று சோகமாய் சினுங்கிக்கொண்டிருந்தது .

         நாலாப்பு கமலா டீச்சர் எப்போதும் டெட்டால் போட்டுத்தான் கை கழுவுவார்.  என்னையும் அதிலேயே கழுவச்சொல்வார்.  இப்படித்தான் டெட்டால் வாசனை எனக்கு பிடித்துப்போனது.  வெயிட் எ செகண்ட்! நான் ஏன் இங்கு வந்தேன்? ஆங்! காமினியை பார்க்கத்தானே! தேடுதலின் 17 வது நிமிடத்தில் அந்த அறையை கண்டுபிடித்தேன். டாக்டர் ஏதோவொரு  ட்யுபை அவளின் கையில் சொருகிக்கொண்டிருந்தார். அவள் காமினியேதான். டாக்டர் கதவின் பக்கம் திரும்பினார். பட்டென்று ஒளிந்து கொண்டேன். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு வயர்களைஎல்லாம் பிடுங்கி விட்டு அருகில் இருந்த ஜன்னலைத்திறந்து வெளியே குதித்தாள்.நானும் அந்த ஜன்னல் வழியே குதித்து அவளைத் தொடர்ந்தோடினேன் "காமினி.. நில்... சிவா உன்னை கொல்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறான்" என்று கத்தியபடியே.
  பலத்த காற்றின் ஆடும் மரங்களுக்கிடையே ஓடிய  காமினிக்கு எதுவும் கேட்கவில்லை.  ஆனால் தூரத்தில் ஒருவன் துரத்தி வருவதை மட்டும் கண்டாள் ;ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.  சிறிது தூரம் ஓடிய பின் நின்று திரும்பிப்பார்த்தாள்.  யாரும் தொடரவில்லை என்று தெரிந்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.  " யாரிவன்? ஒருவேளை சிவா அனுப்பிய ஆளாக இருப்பானோ ? " என்று காமினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே பின்னால் சிவா குரல் கேட்டது . 
        " இப்படி தனியா வந்து  மாட்டிக்கிட்டியே " என்று எள்ளினான் இன்ஸ்பெக்டர் சிவா.  அந்த வைரம் எத்தனை கோடி பெறும் தெரியுமா ? இந்த நாத்தம் பிடுச்ச காக்கிச்சட்டைய தூக்கிபோட்டுட்டு  மலேசியா பறந்திருவேன் " என்றான் . " என் உயிரே போனாலும் உன்னைப்போல அயோக்கியனுக்கு வைரம் எங்க இருக்குன்னு  சொல்ல மாட்டேன்டா" கர்ஜித்தாள் காமினி.  "ஸாரி...  எனக்கு வேற வழி தெரியல "  என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

           தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். காமினி  எங்கே போனாள் என்றே தெரியவில்லை . அப்பாவை ரிஷப்சனில் விட்டது நினைவுக்கு  வந்தது . அத்திருப்பத்தின் முடிவில் காமினி  தூரத்தில் தெரிந்தாள்.  பக்கத்தில் ஒருவன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான் . திடிரென்று துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றியில் வைத்தான் . யோசிக்கக்கூட அவகாசமின்றி ஓடி வந்த வேகத்தில் அவன் மீது பாய்ந்தேன். நிலைகுலைந்த அவன் அங்கிருந்த மரத்தில் மோதி மயக்கமானான் . "இவன் சிவா தானே .." என்றேன் காமினியிடம் . "உனக்கு எப்படி தெரியும்.. யார் நீ... " என்றாள் காமினி. ஏழே நிமிடத்தில் அனைத்தையும் சொல்லி முடித்தேன் .என்னை குழப்பமாய் பார்த்தாள். "நான் உங்களைக் காப்பாற்றிவிட்டேன் .."என்று சந்தோஷக் கூச்சலிட்டேன் . அப்போது வழக்கமாய் வரும் பின்னந்தலைவலி ஆரம்பித்தது.  கண்கள் இருட்டியது. தூரத்தில் ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் மயங்கிக் கொண்டிரு..............
                 
         காமினி காலிங் பெல்லை அழுத்தினாள். குழப்பம் கொட்டிக் கிடந்தது அவள் முகத்தில். கதவைத் திறந்த பரந்தாமன் " காமினி.. வெல்டன்.. எப்படியோ போலிஸ் கண்ல மண்ணை  தூவிட்டு இந்த வைரத்தைக் கொண்டு வந்துட்டியே " என்றார் ."அது இருக்கட்டும் சார்.. பட் எவனோ ஒருத்தன் சிவா கிட்ட இருந்து என்னை காப்பாத்துனான்... நீ வச்சிருக்கிற வைரம் நல்ல காரியத்துக்குத்தான் னும், நீ கெட்டவ இல்லன்னும் சொன்னான்.... உங்க பேரைக் கூட  சொல்லி நலம் விசாரிச்சான்..யாரவன்.. அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது னு தெரியலை... காலடிச்சத்தம் கேட்டு ஓடி வந்துட்டேன் .. மேலும் அவன் இன்டர்நெட், பரிசல்காரன், சவால் கதை என்றெல்லாம் உளறினான் ..." என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். ""நல்லவங்களை கடவுள் என்னிக்குமே கைவிடமாட்டார்மா...  ஆண்டவனா பாத்து அனுப்பி வச்ச அவனும் அவன் குடும்பமும் நல்லா இருக்கணும்..."" என்றார் பரந்தாமன்.
         கண்கள் வி.......ழி......த்....த.. போது நான் மருத்துவமனையில் இருந்தேன் . வெளியே அப்பா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.   "  "  ரெண்டு வருஷத்துக்கு முன்னால, சரியா சொல்லனும்னா, 2010 செப்டம்பர் பாதியிலிருந்து அவன்ட்ட வித்தியாசத்த பாத்தோம்...நவம்பர் 15 க்கு மேலதான் சுத்தமா மாறிட்டான்... காமினி, பரிசல்காரன், இன்டர்நெட் ப்ளாக், வைரம் னு மாறி மாறி உளறிட்டே இருந்தான்... இதுவரைக்கும்  எந்த வன்முறையிலும் இறங்காதவன், இன்னிக்கி அந்த இன்ஸ்பெக்டர போட்டு அடிச்சிருக்கான்னா, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு டாக்டர் ... நீங்கதான் எப்படியாவது எம்பையனை குணப்படுத்தணும்..."""  "  

           ""  "  பயப்படாதீங்க சார் ... நீங்க சொன்னதை வச்சு இன்டெர்நெட்ல தேடிப்பாத்தேன்... பரிசல்காரன் னு ஒருத்தர் அவரோட ப்லாக்ல  வச்சிருந்த ஒரு சிறுகதை போட்டிதான்  உங்க பையன் இப்படி ஆனதுக்கு காரணம்னு நினைக்கிறேன்...அப்போட்டில over-obsessed ஆகி , போட்டில தோத்து போனதுல மூளை குழம்பிருக்கலாம்... But strangely,இன்னிக்கி காமினி னு ஒரு பொண்ணு  அட்மிட் ஆகியிருந்தாங்க.. அவங்களை இப்ப காணோம்... அந்த இன்ஸ்பெக்டர் பேரு கூட சிவா தான் .... இதெல்லாம் வச்சு பாக்கும்போது அந்த பரிசல்காரனுக்கு E.S.P. பவர் இருக்குன்னு நினைக்கிறேன்.. அவரைப் பிடிச்சு விசாரிச்சா இன்னும் நிறைய விஷயம் நமக்கும் இந்த உலகத்துக்கும் தெரியவரும்....""    என்றார் டாக்டர் . கேட்டுக்கொண்டிருந்த எனக்கு பின்னந்தலையில் சுர்க் என்றது.  மூளையை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது.  சுவற்றில் இருந்த காலண்டரை  பார்த்தேன்.  12.12.2012.  மேலே முருகன் சிரித்தார்.
          ரிசப்ஷன் டிவியில் அழகி ஒருவள் இன்று பிறந்தநாள் காணும் நடிகரும் கோ.கு.மா.கா.  கட்சித் தலைவரும் ஆன ரஜினிகாந்தை வாழ்த்திக் கொண்டிருந்தாள். கீழே ""இன்னும் இரு வாரங்களில் உலகம் அழியுமா..? அழியாதா..? அறிய சன் நியுஸ் காணத் தவறாதீர்..."" என்று கீழே ஓடிக் கொண்டிருந்தது.


                                            ---முற்றும்---

டிஸ்கி : நான் ஏற்கனவே எழுதியதுதான்.. சிறு திருத்தங்களுடன் ... ஒரு பாசிடிவ் முடிவுடன்... டைட்டில்ல ஏன்டா எந்திரன் னு கேக்குறீங்களா ... சும்மா ஒரு ஹைப்புக்குத்தான்....
                  விமர்சனங்களுக்கு  நன்றி 







10 கருத்துகள்:

  1. அட இப்படி கூட எழுதலாமா ..?
    அந்த போட்டில தோல்வி அடைஞ்சதால கூட மூளை குழம்பிடுதா ..?
    நல்லா கெளப்புறீங்க பீதிய ..! நானும் எழுதிருக்கேன்.. எனக்கு ஏதும் ஆகம இருந்தா போதும் .!!

    பதிலளிநீக்கு
  2. ஒரே ஒரு டவுட்டு.. நீங்களே சொல்லுங்க, காமினி நல்லவளா.. கெட்டவளா ?
    வெற்றிபெற வாழ்த்துக்கள்..

    (மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

    பதிலளிநீக்கு
  3. நல்லா இருக்கு.

    ஆனா பிளாஷ் பேக் வரக் கூடாதே

    பதிலளிநீக்கு
  4. Gopi Ramamoorthy சொன்னது…
    நல்லா இருக்கு.

    ஆனா பிளாஷ் பேக் வரக் கூடாதே

    Raj : இல்லீங்க கோபி... அந்த அப்பா தன் பையன் ரெண்டு வருஷமாக பையித்தியமாக இருக்கிறான் என்றுதான் சொல்ல முற்பட்டார். நன்றி

    பதிலளிநீக்கு
  5. Madhavan சொன்னது…
    ஒரே ஒரு டவுட்டு.. நீங்களே சொல்லுங்க, காமினி நல்லவளா.. கெட்டவளா ?
    வெற்றிபெற வாழ்த்துக்கள்..


    Raj :: கதையில் வரும் பரிசலோட E.S.P. பவரின் படி காமினி நல்லவள்தான். நன்றிங்க மாதவன்

    பதிலளிநீக்கு
  6. ப.செல்வக்குமார் சொன்னது…
    அட இப்படி கூட எழுதலாமா ..?
    அந்த போட்டில தோல்வி அடைஞ்சதால கூட மூளை குழம்பிடுதா ..?
    நல்லா கெளப்புறீங்க பீதிய ..! நானும் எழுதிருக்கேன்.. எனக்கு ஏதும் ஆகம இருந்தா போதும் .!!

    Raj said::

    நீங்க கவலைப் படாதீங்க செல்வா. பட வேண்டியது நான்(கதை நாயகன்)உம், பரிசலும் தானே.. நன்றி

    பதிலளிநீக்கு
  7. அறுவையாக இல்லாமல் அறுசுவையாக இருந்த்து...
    ரஜினியை நம்பியோருக்கு வெற்றி நிச்சயம்.. ஆனால் ஜெயித்த பின் அவரையே திட்ட ஆரம்பித்து விடாதீர்கள் ( அதுதான் நம் மக்கள் வழக்கம் )

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமாக இருக்கு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நடுவர்களுக்கு ஆப்பு தான் .. ஏதோ நம்மளால முடிஞ்சது :) :)

    பதிலளிநீக்கு
  10. நன்றிங்க asiya omar

    நன்றி இரகுராமன்

    நன்றி Abhi

    பதிலளிநீக்கு